தை பொறந்தால் வழிபிறக்கும் என்று
விதை நெல்லுக்கும் விழிபிதுங்கி வாழும்
கதை சொல்வேன் விழிநீருடன் நாளும்
கீதையும் சொல்லாத பழியாருக்கு? கேளும்...
பொய்க்கும் மழையை நினையாது
மெய்க்குள் வியர்வையால் நனைந்து
வாய்க்கால் வெட்டும் நண்பன்
நிலத்தில் நம்பிக்கையை நட்டு
களத்தில் எதிர்காலத்தை விட்டு
நிஜத்தில் நசுக்கப்படும் தோழன்
வாடிய பயிரைகண்டு வாடி
ஓடியோடி பயிரை வாடாமல்
உயிரை கொண்டுவந்த பிரம்மா.
மின்வெட்டால் நேர்ந்த வறட்சியை
தன்னுடர்கட்டால் பசுமை புரட்சியை
நீரிறைத்து காக்கும் புரட்சியாளன்
தான் விளைத்ததை தான் உண்ணாமல்
தன்ஒரு வயிற்று கூழுக்கும் கஞ்சிக்கும்
தாரை வார்க்கும் தன்னல மற்றவன்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றயைவர்
தொழுதுண்டு பின்செல்வர் வள்ளுவர் வாக்கு
அழுது துவண்டாலும் அவன் நமக்கு
உணவளிக்கும் பழுதில்லா அட்சய பாத்திரம்
உயிர் காக்கும் உணவளிக்கும் அவனுக்கு
உயிரின் எழுத்தாய்(அ...ஆ.......ஔ) ஒரு சமர்ப்பணம்...
அவன் மரக்கறி உண்டானோ தெரியவில்லை எமக்கு
ஆனால் எலிக்கறி உண்டசோகம் தெரியுமோ எவர்க்கு
இலையில் காய்கறியுடன் உண்ண தெரியும் நமக்கு
ஈகையுடன் நன்றிகடனும் உண்டு புரியுமோ அவனுக்கு
உலையில் கொதித்த உன்னத சோறுண்டு நமக்கு
ஊர்காட்டில் மிதித்த தன்பாத சேறுமில்லை அவனுக்கு
எட்டு திக்கும் உணவளிக்கும் வள்ளலவன் நமக்கு
ஏர்பிடித்ததில் மிச்சம் உணவில்லா வறுமை அவனுக்கு
ஐம்பூதங்கள் கைவிட்டாலும் இவன் திறமை இவனுக்கு
ஒருபோதும் கைவிட்டதில்லை அவன் பொறுமை அவனுக்கு
ஓட்டு கூரையில் காகத்திற்கு உணவளிக்கும் நமக்கு
ஔடதமாய் உணவுதரும் உழவனுழைப்பு தெரிவதில்லை எவர்க்கும்
உழவர் திருநாள்,
உழுவோரை வணங்கும் ஒருநாள்
உழைபோரை போற்றும் பெருநாள்
நல்லோருக்கு இனிய தமிழர் திருநாளும்
எல்லோருக்கும் என் இனிய உழவர் பெருநாளும்
தமிழல்லோரும் போற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இவன்
No comments:
Post a Comment